×

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் போராட்டம்

அசாம்: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசாம் தலைநகர் குவாஹாத்தியில் கிரிஷக் முக்தி சங்கராம் சமிதி என்ற அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா:

கடந்த 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் 7 ஆண்டுகள் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்ற திருத்தம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியின்போது, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனினும், வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த அரசியல் தலைவா்களும், மாணவா் அமைப்புகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனை காரணமாக வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி வந்தார்.

மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்:

இந்த நிலையில், நேற்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், மக்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல, மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு தனித்தொகுதி ஒதுக்கீடு செய்வதை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. மேலும், வரும் திங்கட்கிழமை மக்களவையில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : protest ,Assam , Assam, Citizenship Law Amendment Bill, Protest, People, Struggle
× RELATED ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக...