நாடாளுமன்ற உணவகங்களில் இனிமேல் சந்தை விலைக்கே உணவு விற்பனை நடக்கும்: மானிய விலையில் உணவு வழங்கும் நடைமுறை ரத்து

டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற கேண்டீனில் மிக மலிவான விலையில் உணவு பொருட்கள் விற்கப்பட்டன. இது குறித்து சர்ச்சை வெடித்ததை அடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் உணவு பொருட்களின் விலை ஓரளவுக்கு அதிகரித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு விநியோகம் நடைபெற்று வந்தது. இதற்காக ஆண்டு தோறும் சுமார் 17 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி வந்தது. அதே சமயம், மானிய விலையில் கிடைக்கும் உணவு தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்பிக்களுக்கு சலுகை விலையில் உணவு கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கேண்டீனுக்கு ஒதுக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய எம்பிக்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கேண்டீனில் உள்ள உணவுகள் இனி உரிய விலையில் விற்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற உணவகங்களுக்கு இனி மானியம் அளிக்க வேண்டாம் என்ற முடிவை, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சி எம்.பி.க்கள் ஏற்றுக் கொண்டனர். தன் மூலம், மானியம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.17 கோடி ஆண்டு தோறும் சேமிக்கப்படும். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories: