சென்னை: நாகையில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறைக்கு மாற்ற கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்க மாநில அரசின் பங்களிப்போடு 75 புதிய மருத்துவ கல்லூரிகளை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் திருப்பூர், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க 21.66 ஏக்கர் நிலம் ஒதுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.