சென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலக தரத்திற்கு மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்தவும், மீன் கடைகளை ஒழுங்குபடுத்தவும் மேலும் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழங்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினா கடற்கரையில் தற்போது வரை 1486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளதாகவும், லூப் சாலை பகுதியில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், பின்னர் தற்போது கடற்கரை பகுதியில் உள்ள கடைகள் மீன் சந்தைக்கு மாற்றப்படும் எனவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து மெரினா கடற்கரை வணிக வளாகம் அல்ல என தெரிவித்த நீதிபதிகள், மெரினா கடற்கரை மக்களுக்கானது என குறிப்பிட்டனர். மேலும் அடுத்த 6 மாதத்திற்குள் மெரினா கடற்கரையை  உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மெரினா கடற்கரையில் உள்ள உணவு கடைகளில், உணவு பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படாவிட்டால் அவற்றினை அகற்ற வேண்டும் எனவும், விதிகளை மீறி நடத்தப்படும் கடைகளை தேவைப்பட்டால், கட்டாயப்படுத்தி அகற்றலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். தொடர்ந்து, கடற்கரையின் அழகை மறைக்கும் வகையில் இருக்கும் கடைகளை கடற்கரை நோக்கி நேர்நிலையாக அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை சுத்தமாக வைப்பது குறித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories: