நகராட்சி, மாநகராட்சி வரம்பில் ஹெல்மெட் கட்டாயமில்லை: மோட்டார் வாகன சட்ட விதிகளை தளர்த்தியது குஜராத் அரசாங்கம்!

அஹமதாபாத்: திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கடுமையான விதிகளில் ஒரு சிறிய தளர்வினை  கொண்டு வந்துள்ளது குஜராத் அரசு. கடந்த புதன்கிழமை அம்மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் கீழ் உள்ள பகுதிகளில் கட்டாய ஹெல்மெட் விதியை தளர்த்தியது. அதாவது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலும் செல்லலாம். ஆனால் நெடுஞ்சாலைகளிலும் கிராமப்புறங்களிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசத்தை காட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் போனால் காவல்துறை அபராதம் வசூலிக்க தேவையில்லை என கூறியுள்ளது.

கடந்த முறை நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு இப்போது இருப்பதைவிட பல மடங்கு அபராத கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இனி ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100-க்கு பதில் ரூ.1000 அபராதம் வு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்டாய தலைக்கவச விதிக்கு எதிராக குஜராத் அரசாங்கம் பல்வேறு மாற்றங்களை கையில் எடுத்துள்ளது. அதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது தன்னார்வமாக இருக்க வேண்டும் என்ற முடிவு மாநில அமைச்சரவையால் எடுக்கப்பட்டது.

இதையடுத்து, மாநில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் வரம்பில் ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படாது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ஆர் சி ஃபால்டு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு காந்திநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், நகர எல்லைகளில் இந்த விதிகளை மாற்றி அமைக்க அரசாங்கத்திற்கு அனுமதி கிடைத்ததால் பல விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புறங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். முன்னதாக, குஜராத்தில் பாஜக அரசு முதலில் புதிய எம்.வி.ஏ.வில் பரிந்துரைக்கப்பட்ட அபராதங்களை தளர்த்தியது. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பின்படி, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் புதிய சட்டத்தில் ரூ.1,000 க்கு பதிலாக ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டது.

Related Stories: