அரபிக்கடலில் உருவானது புதிய புயல்: பவன் என பெயரிடப்பட்ட இந்த புயல், மேற்கில் நகர்ந்து ஓமன் கடற்கரையை அடையும்... வானிலை மையம்

டெல்லி: தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ள நிலையில்,கடந்த நான்கு நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வட கிழக்கு பருவமழையின் காரணமாக நேற்று வரை தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 360 மிமீ மழையை காட்டிலும் தற்போது கூடுதலாக 11 மிமீ மழை பெய்துள்ளது.

பருவமழை தொடங்கி இதுவரை புயல் ஏதும் உருவாகி தமிழகத்தை நெருங்கி வரவில்லை. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக இதுவரை ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் தமிழகத்தில் போதிய அளவுக்கு மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் இரண்டு காற்றழுத்தங்கள் உருவாகி அவை மேலும் வலுப்பெற்று தற்போது ஒன்றாக இணைந்து புயலாக மாறியுள்ளது. இது மகாராஷ்டிரா கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதனால் வட மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை நீடித்து வருகிறது.

இந்நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு பவன் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. பவன் புயலால் இந்திய துணை கண்டத்திற்கு மழையோ, தாக்கமோ இருக்காது. பவன் புயல் மேற்கில் நகர்ந்து ஓமன் கடற்கரையை அடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: