வங்கி மோசடி வழக்கு: வைர வியாபாரி நீரவ் மோடியின் காவலை ஜனவரி 2ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: வங்கி மோசடி வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடியின் காவலை ஜனவரி 2ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி(48), அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பே அவா்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனா். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளர். இந்தியாவில் உள்ள அவா்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.  நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீரவ் மோடியின் சிறை காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 6ம் தேதி நீரவ் மோடி காணொலிக் காட்சி மூலம் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சிறை காவலை 28 நாட்கள் நீட்டித்து நீதிபதி அர்புத்நாத் உத்தரவிட்டிருந்தார். அவரது சிறை காவல் முடிவடைந்த நிலையில் வீடியோ காணொலிக் காட்சி மூலம் அவர் நேற்று வெஸ்ட்மின்ஸ்ட்டர் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீரவ் மோடியின் காவலை மேலும் 28 நாட்கள் (ஜனவரி 2ம் தேதி வரை) நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் முடிவடையும் என வெஸ்ட்மின்ஸ்ட்டர் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: