×

ஒருதலை காதல் பிரச்னையில் கல்லூரி மாணவிக்கு வெட்டு: வாலிபர் கைது,.. குரோம்பேட்டையில் பரபரப்பு

சென்னை: குரோம்பேட்டை கணபதிபுரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் மரியநாதன். இவரது மகள் ஜூலி (18) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர், கௌரிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் குரோம்பேட்டை சாந்தி நகர் பகுதியிலுள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் கம்ப்யூட்டர் படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பும்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜூலியின் இரண்டு கைகளிலும் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ஜூலியை பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காயம் பலமாக ஏற்பட்டிருப்பதால் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்த அந்தோணி துரைராஜ் என்பவரின் மகன் பொன் பாக்கியராஜ் (19) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில், பொன் பாக்கியராஜ், ஜூலி ஆகியோர் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஜூலி தன்னுடன் பேசாமல் இருந்து வருவதுடன், இனி பேசக்கூடாது என தெரிவித்ததால் ஆத்திரமடைந்து அவரை வெட்டியதாக தெரிவித்தார்.

போலீசார் விசாரணையில் ஜூலி கூறுகையில், தன்னை பொன் பாக்கியராஜ் ஒரு தலையாக காதலித்து வந்தார். தான் அவரை காதலிக்கவில்லை எனவும் நட்பாக மட்டுமே பழகி வந்ததாகவும் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : college student ,love affair ,affair ,Love , A love affair, college student, youth arrested, chrompet
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது