பிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

* பரபரப்பு வாக்குமூலம்

* ஸ்டூடியோ உரிமையாளருக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்டூடியோவில் பணியாற்றிய பெண் ஊழியர், மயக்க மருந்து  கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததால் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டார்.  இதற்கு  காரணமான ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுவை அரியாங்குப்பம் சுப்பையா நகரில் வசிப்பவர் மண்ணாங்கட்டி. ஓய்வுபெற்ற ஏஎப்டி மில் ஊழியர். இவருக்கு 4 மகள்கள், 3 மகன்கள். கடைசி மகள் தனலட்சுமி (31). பிளஸ்-2 முடித்திருந்த இவர், மகாத்மா காந்தி வீதி சின்னகடையில் மதுர (40) என்பவருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் 3 ஆண்டாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி முதல் மதுர தனது ஸ்டூடியோவில் தனலட்சுமிக்கு பிரியாணி, டீ, காபி ஆகியவற்றில் அடிக்கடி மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இவ்விவகாரம் நாளடைவில் தனலட்சுமிக்கு தெரியவரவே தனது தந்தையிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து மதுரயை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்த நிலையில், அவருக்கு ஏற்கனவே திருமணமான தகவல் தெரியவரவே தனலட்சுமி அதிர்ச்சியில் உறைந்தார். சமீபகாலமாக மனஉளைச்சலில் இருந்த தனலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தனலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அப்போது மேற்கண்ட தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை? என கேட்டதற்கு, மதுரக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான் புகார் கொடுத்தால் அவரது குடும்பம் நாசமாகி விடும் என்பதால், அப்போதே புகார் தரவில்லை என்றும், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான நான் இன்னொருவரை திருமணம் செய்து அவருக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. அதனால் தான் உயிரை மாய்த்துக் கொள்ள தீக்குளித்தேன்  என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் புகாரை பெற்ற போலீசார் பாலியல் பலாத்காரம் பிரிவின்கீழ் வழக்குபதிந்து மதுரயை தேடி வருகின்றனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை தனலட்சுமி உயிரிழந்தார்.

Related Stories: