வாணியம்பாடி அருகே பயங்கரம் மனைவியை கொன்று கணவனை கடத்திய கும்பல்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(35). இவரது மனைவி சாந்திப்பிரியா(25). இவர்களுக்கு கோமதி(6) என்ற பெண் குழந்தை உள்ளது.இந்தநிலையில்,   சில  ஆண்டுகளுக்கு  முன்பு  சீனிவாசனுக்கும், ஒடுகத்தூர்  பகுதியை  சேர்ந்த அசோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு செம்மரம் வெட்டும்  தொழிலில்  ஈடுபட்டு வந்தனர். மேலும், சீனிவாசன் பூங்குளம் கிராமத்தில் இருந்து அசோகனுக்கு கூலி வேலைக்கு ஆட்களை அனுப்பி வைப்பது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன், பூங்குளம் பகுதியில்  இருந்து   7 பேரை கூலி வேலைக்காக அசோகனிடம் அனுப்பி வைத்துள்ளார். அவர்களுக்கு பணம் தரப்படவில்லை. அதை வாங்கித்தரும்படி சீனிவாசனிடம் வற்புறுத்தி வந்தனர். பணம் தர தாமதமானதால் நேற்று இரவு 7 பேரும் சீனிவாசன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தடுத்த சாந்திப்பிரியாவை சரமாரியாக அடித்து தள்ளிவிட்டனர். இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். பின்னர், அவர்கள் சீனிவாசனை காரில் கடத்தி சென்றனர். உறவினர்கள் சாந்திப்பிரியாவை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்றனர்.

அங்கு  பரிசோதித்த டாக்டர்கள் அவர்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஊர்மக்கள் திரண்டதால் 7 பேர் கும்பல் சீனிவாசனை காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர்.இதுகுறித்து, ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள்  சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர். இதையடுத்து, டிஎஸ்பி பாலசுப்பிரமணி வழக்குப்பதிந்து சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Related Stories: