கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் சுந்தர்பிச்சை: லாரி பேஜ், செர்கே பிரின் திடீர் விலகல்

சான் பிரான்சிஸ்கோ:  கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட். இதன் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவரான லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் தங்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர். இதனை தொடர்ந்து, தற்போது கூகுள் சிஇஓவாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சுந்தர்பிச்சை, ஆல்பபெட்டின் சிஇஓவாக கூடுதல்பொறுப்பு வகிப்பார்.  கூகுள் நிறுவனத்தை மறுசீரமைக்க, ஆல்பபெட் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் அது கூகுளின் தாய் நிறுவனம் ஆக்கப்பட்டது. இதன் சிஇஓவாக லாரி பேஜ், தலைவராக செர்கே பிரின் பொறுப்பேற்றனர். இதையடுத்து கூகுளின் சிஇஓவாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பேற்றார். இந்நிலையில், ஆல்பபெட் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக லாரி பேஜ், செர்கே பிரின் ஆகிய இருவரும் திடீரென அறிவித்தனர்.

ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்சும், மைக்ரோசாப்டை பில்கேட்சும் எப்படி உருவாக்கினார்களோ, அதே போலத்தான் லாரி பேஜ், செர்கே பிரின் கூகுளை உருவாக்கினார்கள். அங்குலம் அங்குலமாக அந்த நிறுவனத்தை செதுக்கி பிரமாண்ட வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் இவர்கள். புதிய முயற்சிகளை தொடங்குவதற்காகவே தலைமை பதவியில் இருந்து விலகல் முடிவு  எடுக்கப்பட்டதாக கூறியுள்ள இவர்கள், ஆல்பபெட் உறுப்பினர் மற்றும்  பங்குதாரர்களாக நீடிப்பார்கள். பெருமை மிக்க பெற்றோர் போல அன்பையும்  அறிவுரையையும் கொடுத்து விட்டு தொலைவில் இருந்து கவனிப்போம்.  நிறுவனத்தை  வழி நடத்த சுந்தர் பிச்சையை விட சிறந்தவர் யாரும் இருக்க முடியாது என  இவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: