உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறைக்காக 'கிரிக்கெட்டின் மன உறுதி'எனும் சிறப்பு விருது

லண்டன்: 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறையை பாராட்டி ‘ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 14ம் தேதி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி இன்னிங்சில் சில குளறுபடிகள் நடந்தது. இறுதியில் இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுக்க ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.

இதையடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த நியூசிலாந்து அணியும் ஒரு ஓவரில் 15 ரன்களே எடுக்க மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும் என அனைவரும் எண்ணிய நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்துள்ளதாக கூறி இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வழங்கப்பட்டது. இது நியூசிலாந்து அணியினருக்கு மட்டுமன்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இறுதி வரை மன உறுதியுடன் முழுத்திறமையை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணிக்கே கோப்பை கிடைத்திருக்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் மற்ற வீரர்களும் இரண்டாம் இடத்தை எவ்வித மனக்கலக்கமுமின்றி ஏற்றுக்கொண்டனர். இந்த ஆட்டத்திற்கு பிறகு பென் ஸ்டோக்சும், அந்த ஆட்டத்தின் நடுவரும் விமர்சிக்கப்பட்டனர். இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் திடமான மனப்பாங்கை பாராட்டி அந்த அணிக்கு இவ்வாண்டின் கிரிக்கெட்டின் மன உறுதி எனும் சிறப்பு விருதை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் வழங்கி கௌரவித்துள்ளது.

Related Stories: