காத்மாண்டு: நேபாளத்தில் நடந்து வரும் தெற்காசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனை மெஹுலி கோஷ் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட கோஷ் 253.3 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். இதன் மூலமாக, ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை தொடரில் சக வீராங்கனை அபூர்வி சாண்டிலா 252.9 புள்ளிகளுடன் படைத்த உலக சாதனையை கோஷ் முறியடித்தார். இவர் சமீபத்தில் நடந்த ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை தொடரில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தெற்காசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய அணியின் பதக்க வேட்டை தொடர்கிறது. மெகுலி கோஷ் வென்ற தங்கப் பதக்கத்துடன் இந்தியா 10 தங்கம் உட்பட மொத்தம் 27 பதக்கங்களை வென்றுள்ளது.
* தெற்காசிய பேட்மின்டன் தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் இறுதிப் போட்டியில் இலங்கை அணிகளை வீழ்த்தி தங்கம் பதக்கம் வென்றன. ஆண்கள் அணி 3-1 என்ற கணக்கிலும், மகளிர் அணி 3-0 என்ற கணக்கிலும் இலங்கையை வீழ்த்தின.
* ஆண்கள் வாலிபால் போட்டியின் பைனலில் இந்தியா 3-1 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.