டெல்லி: சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டில் அறிவிப்பு அரசாணையை வெளியிட்டது. இதை எதிர்த்து போட்ட வழக்கில், சட்ட விதி மீறல்களை அடிப்படையாக கொண்டு 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் எட்டு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், மக்கள் விரும்பாத இடத்தில் ஏன் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறீர்கள்? வேறு மாநிலங்களில் செயல்படுத்த வேண்டியது தானே? என்று மத்திய மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும் சந்தான கவுடர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 170க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்த மனுக்கள் அனைத்தும் நிலுவையில் உள்ளது. அதனையும் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,” இதில் தனிப்பட்ட ஒரு மனு மீது மட்டும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஏனெனில் மாநில நலம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளது. மேலும் அனைத்து மனுக்களையும் தனித்தனியாக விசாரித்து வந்தால் வழக்கு எப்படி முன்னோக்கி செல்லும். அதனால் எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிப்பு என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அனைவரையும் வழக்கில் எதிர் மனுதாரராக சேருங்கள். எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றமே ஆகஸ்ட் 7ம் தேதி விசாரணை மேற்கொள்ளும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தது. தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம்,
இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேலும் இந்த வழக்கில் உணர்ச்சிப்படும் அளவிற்கு எதுவும் கிடையாது. இருப்பினும் இது பொதுமக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் விரிவாக விசாரிக்க விரும்புகிறோம். அதனால் வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்த நீதிபதிகள் அன்றைய தினம் இறுதி விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திட்ட அதிகாரி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ரமணா தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கிறது.