சென்னை: உள்ளாட்சித் தேர்தலையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிடக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள் டிசம்பர் 13ம் தேதியாகும். வாக்கு எண்ணிகை ஜனவரி 2ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல, புதிததாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பழைய மாற்று வரையறையின்படியே தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாவட்ட ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 13,362 பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. கிராம ஊராட்சி துணை தலைவர் பதவியிடமும் மறைமுகமாகவே தேர்ந்தெடுக்கப்படும். இதற்கான தேடுதல் ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு பொருந்தாது என மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிடக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.