கடந்த 5 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு சென்ற 34 ஆயிரம் இந்தியர்கள் மரணம்: மக்களவையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்ற இந்தியர்களில் 34 ஆயிரம் இந்தியர்கள் மரணம் அடைந்ததாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன், மக்களவையில் நேற்று அளித்த பதிலில் கூறியதாவது: குவைத், சவுதி அரேபியா, பக்ரைன், கத்தார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 6 வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 15 பேர் இறக்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை 33,988 இந்தியர்கள் இறந்துள்ளனர். இவர்களில் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் 1,200 பேர்.  

இந்தாண்டில் மட்டும், 4,823 பேர் பலியாகி உள்ளனர். சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில்தான் பெரும்பாலான இந்தியர்கள் பலியாகி இருக்கின்றனர்.  வளைகுடா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏஜென்ட்டுகள் ஏமாற்றியதாக, இந்தாண்டில் அக்டோபர் வரை 15,051 புகார்கள் வந்துள்ளன. சம்பளம் சரியாக வழங்கவில்லை, அதிக நேரம் வேலை வாங்குவதாகவும், விடுமுறை அளிப்பதில்லை எனவும் புகார்கள் வந்துள்ளன. இந்தியா திருப்ப அனுமதிக்கப்படுவது இல்லை எனவும், மரணம் அடைந்தால் இழப்பீடு அளிக்கப்படுவது இல்லை எனவும் புகார்கள் வந்துள்ளன.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடன் சுமை, மன அழுத்தம், அதிக வேலைப்பளு, போலி  ஏஜென்டுகளால் ஏமாற்றம் ஆகியவையே, இவர்களின் மரணத்துக்கு காரணம் என தெலங்கானா வளைகுடா ஊழியர்கள் நலச்சங்க தலைவர் பசந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். 

Related Stories: