×

காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு தீவிரவாத ஆதரவு நிறுவனத்திடம் பாஜ தேர்தல் நிதி வாங்கியுள்ளது: பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக அமலாக்கத் துறையால் விசாரிக்கப்படும் நிறுவனத்தில், பாஜ தேர்தல் நன்கொடை பெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறி உள்ளது. கடந்த 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி இக்பால் மேமன் என்கிற இக்பால் மிர்ச்சி. இவரிடமிருந்து சொத்துக்களை வாங்கியதாகவும், பணபரிவர்த்தனை செய்ததாகவும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம்  அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.அந்நிறுவனத்திடம், கடந்த 2014-15ல் பாஜ கட்சி தேர்தல் நன்கொடையாக ரூ.10 கோடி பெற்றிருப்பதாக தி வயர் இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபமாகி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், ‘தேர்தல் நிதி பத்திர ஊழல் மூலம் தீவிரவாத தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து பாஜ நன்கொடை பெற்றுள்ளது. இது தேச துரோகம் இல்லையா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘தேர்தல் நிதி பத்திர ஊழல் விவகாரம் தேச துரோக விவகாரமாகி உள்ளது. இதற்கெல்லாம் பிரதமர் மோடியும், பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவும் பதில் சொல்லியே தீர வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா, ‘‘இந்த சட்டவிரோத பணத்தை நன்கொடையாக பெற்றதை  எப்படி நியாயப்படுத்துவீர்கள்? எந்த கணக்கும் காட்டாமல் பாஜ பல வழிகளில் நன்கொடை பெற்றிருக்கிறது. இந்த குட்டு தற்போது வெளிப்படுகிறது,’’ என்றார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Tags : Congress ,election ,BJP , Congress ,sensationalism , Bjp Election Fund Acquired, Prime Minister
× RELATED பெண்கள் பற்றி இழிவான பேச்சு பாஜ எம்பி,...