பெரும்பாக்கம் ஏரியில் சடலம் வீச்சு கை, கால்களை கட்டி இளம்பெண் கொலை: போலீஸ் தீவிர விசாரணை

வேளச்சேரி: பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் ஏரியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் ஏரியில் 24 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு நேற்று அதிகாலை அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு  சென்னை  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்தவர்கள் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏரியை சுற்றி உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். துரைப்பாக்கம்: கானத்தூர் கடற்கரையில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்து சென்ற கானத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர்  யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்து கடலில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்கிற கோணத்தில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: