கோவை: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ல் அவரது முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை குறித்து நேற்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர், வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.