×

அனைத்து இடஒதுக்கீடு விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து இடஒதுக்கீடு விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மாநில அரசும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங்களில் (எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி) அரசியல் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கவில்லை” என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும், அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரோ அல்லது பிரதமரோ நாடாளுமன்றத்தில் உரிய பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. 2017-18ம் ஆண்டுகளில் பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட 9,966 மருத்துவ இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 2,689 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி ஆகிய மருத்துவ இடங்கள் மண்டல் கமிஷன் அடிப்படையிலான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்தில் மத்திய அரசு கல்லூரிகளில் கிடைத்ததோ வெறும் 260 சீட்டுக்கள்.

2018-19ம் ஆண்டில் 12,595 மருத்துவ இடங்கள் பொதுத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டதோ 299 இடங்கள் மட்டுமே. இரு வருடங்களிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இடஒதுக்கீடு கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பாஜ ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், இப்போது பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் இடஒதுக்கீட்டை நிராகரிப்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும். ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின அமைச்சர்கள் எண்ணிக்கை அடியோடு குறைக்கப்பட்டு விட்டது.மத்திய அரசின் செயலகத்தில் உள்ள அரசு செயலாளர்கள் மட்டத்தில் அறவே இல்லை என்றதொரு நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு மூலம் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் மருத்துவக் கல்வியைப் பாழ்படுத்திய மத்திய பாஜ அரசு இப்போது அரசியல் சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டு உரிமையையும் தட்டிப் பறிப்பது மாபெரும் மன்னிக்க முடியாத துரோகம்.

ஆகவே, பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017-18, 2018-19ம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டன?. மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு? என்பது உள்ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கின்ற 27 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வர வேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசனிடம் நலம் விசாரித்தார்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், 2016ல் தனது அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது நடந்த அறுவை சிகிச்சையில், அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. தற்போது அந்த கம்பியை வெளியே எடுப்பதற்காக, நேற்று காலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். பிறகு அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் இருந்த டைட்டானியம் கம்பியை டாக்டர்கள் வெற்றிகரமாக நீக்கினர். இதையடுத்து தனி அறைக்கு மாற்றப்பட்ட கமல்ஹாசன், மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நேற்று அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதுபற்றி மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நண்பர் ‘கலைஞானி’ கமல்ஹாசனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

Tags : session ,MK Stalin ,parliament , Stalin
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...