சென்னை: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு குறித்து யாரும் விமர்சனமோ மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளோ, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலைமறியல்களில் ஈடுபட கூடாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். இதில், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 40 அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் உட்பட 1800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பேசினர் இந்நிலையில், திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மருது, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே எந்தவித முன்அனுமதியும் பெறாமல் அயோத்தி வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு ெசய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசை கண்டித்து போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் பலர் ஈடுபட்டனர்.