காருக்குள் ரகசிய அறை அமைத்து ரூ.3 கோடி தங்க நகைகள் கடத்தல் : 3 பேர் அதிரடி கைது

திருமலை: காருக்குள் ரகசிய அறை அமைத்து கடத்திய ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திர மாநிலம் கடப்பாவில் டிஎஸ்பி சூரியநாராயணா தலைமையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கார் மீது சந்தேகமடைந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் இந்த கார் கடப்பாவில் நகைக்கடை நடத்தி வரும் பஜ்ரங்சேட் என்பவரது என தெரிய வந்தது. இதையடுத்து காரில் சோதனை செய்தனர். பின் சீட்டில் சோதனை நடத்தியபோது ரகசிய அறை இருந்தது.

அதில் சுமார் 6 கிலோ 930 கிராம் தங்க நகைகள் இருந்தது. காரில் வந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் நெல்லூரில் இருந்து கடப்பாவிற்கு கடத்தி வந்துள்ளனர். இதேபோன்று எந்தெந்த நகரங்களுக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது, எந்த முறையில் கடத்துகிறார்கள் போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், தங்க நகைகளை வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: