மனைவியை கொல்ல முயன்ற வழக்கு..: திருவாரூர் முன்னாள் எம்எல்ஏ அசோகன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் திருவாரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அசோகன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் வீட்டுவசதிய வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அசோகன்(57). இவர் திருவாரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அசோகன் தனது 2வது மனைவி ஹேமா, அவர்களது மகன் மற்றும் மகளுடன் சென்னை பட்டினம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹேமா, கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றுள்ளார்.

ஆனால், ஹேமா வீட்டிற்கு வர இரவு 11 மணி ஆகியுள்ளது. அப்போது அசோகன், ஹேமா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார். ஹேமா மற்றும் அவரது தாயார் ஆகியோரை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கைத்துப்பாக்கியால் சுட்டு மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ஹேமா, தாயாரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இதுகுறித்து ஹேமா பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதையொட்டி அசோகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர், ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடைபெற்று வந்ததது. அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர். ராஜேந்திரன் காயத்ரி ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இன்று அந்த வழக்கில் நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, அசோகன் குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அசோகனுக்கான 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தியும் வைத்துள்ளது. மேல்முறையீடு செய்ய வசதியாக அசோகன் கோரிக்கையை ஏற்று தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

Related Stories: