×

நித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை: பல சிறுவர்களை துன்புறுத்தியது விசாரணையில் அம்பலம்!

அகமதபாத்: குஜராத்தில உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டுள்ள 2 பெண் நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர், தமது 21, 19, 15 வயது மகள்கள் மற்றும் 13 வயது மகன் ஆகியோரை பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் கல்வி பயிலுவதற்காக சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில், ஜனார்த்தனின் மகள்களும், மகனும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் புறநகரில் ஹிராபூரில் உள்ள நித்தியானந்தாவுக்கு சொந்தமான யோகினி சவாஜ்னாபீடம் ஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஜனார்த்தனன் அங்கு சென்றுள்ளார்.

ஆனால் ஆசிரம நிர்வாகிகள் அவரை விரட்டியடித்துவிட்டதாக தெரிகிறது.  இதையடுத்து அவர், எனது நான்கு குழந்தைகளையும் அனுமதியின்றி நித்தியானந்தாவின் ஹிராபூர் ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை மீட்டு தர வேண்டும், என்று குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக ஆசிரமத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு சில விளக்கங்கள் கேட்கப்பட்டது. பின்னர் சிஐடி தனிப்படை போலீசார் கடந்த திங்களன்று அதிரடியாக ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்து ஜனார்த்தனின் 15 வயது மகள், 13 வயது மகன் உட்பட 4 பேர் மீட்கப்பட்டனர். ஆனால் ஜனார்த்தனின் மற்ற இரண்டு மகள்களையும் காணவில்லை என தெரிகின்றது.

இதனையடுத்து ஆசிரமத்தில் இருக்கும் தனது மகள்கள் லோபமுத்ரா(21), நந்திதா(19) ஆகியோரை மீட்டுத்தரக் கோரி அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜனார்த்தன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். தனது மகள்கள் கடத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 9 மற்றும் 10 வயது சிறுவர்கள் அளித்த வாக்குமூலத்தில்,  தாங்கள் நகரில் உள்ள குடியிருப்பில் 10 நாட்களுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், குழந்தை தொழிலாளர்களாக தங்களை பயன்படுத்தியதோடு சித்ரவதை செய்ததாகவும் கூறினார்கள்.

ஆசிரமத்துக்கு வருவோர்களிடம் பல்வேறு சடங்கு பொருட்களை கொடுத்து நன்கொடை வசூலிக்க கூறி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் சிறுவர்கள் தெரிவித்தனர். சிறுவர்களின் இந்த புகாரின் அடிப்படையில் சாமியார் நித்தியானந்தா, ஆசிரம பெண் நிர்வாகிகள் மா பிரியதத்வா மற்றும் மா பிரன்பிரியா ஆகியோருக்கு எதிராக போலீசார் நேற்று முன்தினம் கடத்தல், அடைத்து வைத்தல், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதுமட்டுமல்லாது, அகமதாபாத் ஆசிரமத்தில் அதிரடியாக ரெய்டு நடத்திய போலீஸ் அதிகாரிகள் அதற்குப் பின்பு இரண்டு பெண் நிர்வாகிகளையும் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 2 பெண் நிர்வாகிகளிடமும் போலீசார் 2வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பின்புறம் உள்ள ஒரு தனி இருட்டு அறையில் பல சிறுவர் சிறுமிகள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், கடந்த ஒரு வருடத்திற்கே முன்பே, நித்தியானந்தா வெளிநாடு தப்பிவிட்டதாக குஜராத் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Woman administrators ,administrators , Nithyananda, ashram, female administrators, investigators, children
× RELATED அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15...