தென்காசி : தமிழகத்தின் 33வது புதிய மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
*நெல்லை மாவட்டம் 16 தாலுகாக்கள், 10 சட்டசபை தொகுதிகள், நெல்லை, தென்காசி என 2 எம்பி தொகுதிகளுடன் பெரிய மாவட்டமாக இருந்தது.
*நெல்லையை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என கடந்த 28 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. *இந்நிலையில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்து தமிழக அரசு கடந்த 12ம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது.*தென்காசி புதிய மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள தென்காசி கோட்டத்துடன் புதிதாக சங்கரன்கோவில் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்கள், 251 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.*தென்காசி புதிய மாவட்டத்திற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலெக்டராக அருண் சுந்தர் தயாளன், எஸ்பியாக சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலராக கல்பனா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். *தென்காசி புதிய மாவட்டத்தை துவக்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்று மாலை தூத்துக்குடி வந்தார். இன்று காலை நெல்லை வழியாக தென்காசி சென்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. *அங்கு தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் புதிய மாவட்டம் துவக்க விழா காலை 10/00 மணிக்கு நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். *இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். *இந்த விழாவில் வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.90 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் எடப்பாடி வழங்கினார்.*இவ்விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.