*மதுரையில் பரிதாபத்தை ஏற்படுத்தும் சம்பவம்
மதுரை : மதுரையில் தெரு நாய் ஒன்று தனது குட்டி இறந்தது கூட தெரியாமல் அதனை வாயில் கவ்விக்கொண்டு, சுற்றியபடி அலைந்து திரிவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் உள்ளது நேரு நகர். இப்பகுதியில் தெரு நாய் ஒன்று தனது குட்டியுடன் சுற்றி திரிந்தது. எதிர்பாராதவிதமாக அந்த குட்டி நாய், இரு நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி இறந்ததாக தெரிகிறது.
ஆனால் அந்த தாய் நாய், தனது குட்டி இறந்தது கூட தெரியாமல் அதை வாயில் கவ்விக் கொண்டு ஒவ்வொரு இடமாக சுற்றித் திரிந்தபடி இருக்கிறது. இதனை இப்பகுதி பொதுமக்கள் பரிதாபத்துடன் பார்த்து வருகின்றனர். இப்பகுதியினர் கூறும்போது, ‘‘ஆறறிவு படைத்த மனிதர்களிடம் கூட, பெற்ற சிசுவை இரக்கமின்றி சாக்கடை கால்வாயிலும், குப்பைத்தொட்டியிலும் வீசி விட்டுச் செல்கிற மனோநிலை இருக்கிறது.
ஆனால், ஐந்தறிவு ஜீவனான நாய், தனது குட்டி இறந்தது கூட தெரியாமல், அதன் மீது கொண்ட பாசத்தில் தான் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் இறந்த குட்டியின் உடலுடன் சுற்றித் திரிகிறது. விலங்குகள் தான் மனிதர்களுக்கு பாசத்தை போதிக்கின்றன’’ என்றனர்.