×

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் 2 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்கள் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் 2 நாள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி டெல்லி சிபிஐ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.   ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், இதே வழக்கில் அமலாக்கத்துறையால் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ப.சிதம்பரம் வரும் 27ம் தேதி மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மட்டும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக தற்போது மேலும் சில முக்கிய புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அதனால் இதுகுறித்து திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்து வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.  இதை நேற்று விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர், ப.சிதம்பரத்திடம் 2 நாள் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதன்படி, திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்றும், நாளையும் விசாரணை நடத்த உள்ளனர்.


Tags : Chidambaram ,Enforcement Department ,court ,INX Media , INX Media Case, PC Chidambaram, Enforcement Department, Special Court
× RELATED கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை மேலும் 4...