புதிய கல்விக்கொள்கை அல்ல, புதிய புல்டோசர் கொள்கை: மாநிலங்களவையில் வைகோ கடும் தாக்கு

சென்னை: புதிய கல்விக் கொள்கை அல்ல, புதிய புல்டோசர் கொள்கை என்று மாநிலங்களவையில் வைகோ குற்றம்சாட்டினார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறுக்கிட்டு பேசியதாவது: அவைத்தலைவரும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடியபோது இந்த கல்வித்துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து பொதுப்பட்டியலுக்கு மாற்றிய அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது. இது புதிய கல்விக்கொள்கை அல்ல. மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை ஆகும். அவைத் தலைவர் வெங்கையா நாயுடு: உங்கள் கேள்விக்கு வாருங்கள்.

வைகோ: நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகிறேன். இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம் என்று அமைச்சர் பேசினார்.

அவைத் தலைவர்: உங்கள் வாய்ப்பு முடிந்துவிட்டது. நீங்கள் மூத்த உறுப்பினர். இதற்குமேல் கேட்கக்கூடாது. வைகோ: உறுப்பினரின் உரிமையையும் தாங்கள்தானே காக்க வேண்டும். என் கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவே இல்லையே.இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: