புதுடெல்லி: ‘காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன,’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அங்கு தடைகள் நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ‘காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தவறானது மட்டுமின்றி, பொருத்தமற்றது,’ என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி என்வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது நியாயமானதே. இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன் மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை இங்கு பயன்படுத்த முடியவில்லை. குறிப்பாக, தகவல் அறியும் உரிமை சட்டம், குழந்தைகள் திருமணம் தடை சட்டத்தை இங்கு செயல்படுத்த முடியவில்லை. தற்போது, இங்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், கடந்த அக்டோபர் 14 முதல் போஸ்ட் பெய்ட் மொபைல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 917-க்கும் மேற்பட்ட பள்ளிகள் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட மூடப்படவில்லை. இதுபோன்ற நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைககள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன,’’ என்று வாதிட்டார்.