×

உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபரீதம்: குழந்தை பெற்ற பெண் வயிற்றில் ஊசியை வைத்து தைப்பு

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே மரவெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரம்யா (21). பிரசவத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் ரம்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சைக்கு பின் டாக்டர்கள் தையல் போட்டுள்ளனர். அப்போது, மருந்து போடும் ஊசியை (நீடில்) ரம்யாவின் வயிற்றில் வைத்து டாக்டர்கள் தைத்துள்ளனர்.

பின்னர் மயக்கம் தெளிந்ததும் வலியால் ரம்யா துடித்ததால், அதுபற்றி உறவினர்கள், டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, வயிற்றில் ஊசியை வைத்து தைத்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ரம்யாவை அனுப்பி வைத்தனர். அறுவை சிகிச்சை செய்து ஊசியை எடுப்பதற்கானவசதி இல்லாததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இதற்கிடையே, ரம்யாவின் உறவினர்கள் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். கவனக்குறைவு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டாக்டர் முகமது ஜாஸிர், நர்ஸ் அன்புலெட்சுமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து துணை இயக்குநர் குமரகுருபரன் நேற்று மாலை உத்தரவிட்டார்.

Tags : baby girl ,Uchupolyi Primary Health Center , surgery
× RELATED மூன்றாவதாக பிறந்த பெண் சிசு திடீர் சாவு