மும்பை: மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வாஷ் பேசின், டெஸ்க்டாப் மானிட்டர், மொபைல் போன் சார்ஜிங் பாயின்ட் உள்ளிட்ட வசதிகளுடன் தனது ஆட்டோவை வடிவமைத்து இயக்கி வருகிறார். இந்த ஆட்டோவில் பயணம் செய்வது புது அனுபவமாக இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்யவான் கீதே. இவர் தனது ஆட்டோவை முற்றிலும் வித்தியாசமாகவும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகள் கொண்டதாகவும் மாற்றி அமைத்திருக்கிறார். இவரது ஆட்டோவில் கை, முகம் கழுவ வாஷ் பேசின், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயின்ட், டெஸ்க்டாப் மானிட்டர் போன்ற வசதிகள் உள்ளன. ஆட்டோவில் செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகளிடையே இவரது ஆட்டோவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. பலர் சத்யவான் கீதேயின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களுக்கு தேவைப்படும் போது முன்கூட்டியே சத்யவான் கீதேக்கு போன் செய்து ஆட்டோவை புக் செய்து கொள்கின்றனர். அந்தளவுக்கு அவரது ஆட்டோவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. சத்யவான் கீதே ஒரு கிமீ தூரம் வரை பயணம் செய்யும் முதியவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.