ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது

பல்லாவரம்: பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பால்துரை (38). இவர், நேற்று முன்தினம் இரவு பொழிச்சலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பொழிச்சலூர் பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து, ‘நீங்கள் யார்?, எதற்காக இந்த நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள்? என விசாரித்துள்ளார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், 3 பேரையும் காவல் நிலையம் வரும்படி பால்துரை அழைத்துள்ளார்.

அப்போது, அவர்கள் போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீஸ்காரர் மடக்கி பிடித்து, சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து, தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள், பொழிச்சலூரை சேர்ந்த மணிகண்டன் (33) மற்றும் காந்தி (38), இன்பராஜ் (35) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Related Stories: