இஎம்ஐ மூலம் செல்போன் தருவதாக 110 பேரிடம் 17.28 லட்சம் மோசடி: பிரபல ஷோரூம் நிறுவன ஊழியர் கைது

சென்னை: இஎம்ஐ மூலம் செல்போன் வாங்கி தருவதாக 110 பேரிடம் 17.28 லட்சம் மோசடி செய்த பிரபல செல்போன் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.சென்னை அடையாறு 1வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மெர்சிலின் ஜோசப் (45). மயிலாப்பூரில் உள்ள பிரபல செல்போன் விற்பனை நிறுவனம் ஒன்றில் மேலாளராக உள்ளார். இவர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், மயிலாப்பூர் ஆர்.ேக.மடம் சாலையில் உள்ள எங்கள் நிறுவன ஷோரூமில் பாலபிரதாப், நவீன் பிரியன், பிரகாஷ், சாந்தகுமார், திருமுருகன், சரவணன், வாசுதேவன் உட்பட 8 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், எங்கள் ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மாத தவணையில் (இஎம்ஐ) செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை வாங்கி தருவதாக கூறி, 110 பேரிடம் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்களை பெற்றுள்ளனர்.

பின்னர், அந்த ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து அதன் மூலம் 17 லட்சத்து 28 ஆயிரத்து 413 ரூபாய் கடன் பெற்று, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். ஆனால், அவற்றை சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் வழங்காமல் 8 பேரும் மோசடி செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 8 ஊழியர்களும் 110 வாடிக்கையாளர்களிடம் இஎம்ஐ மூலம் செல்போன் வாங்கி தருவதாக ஆவணங்களை பெற்று 17.28 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 8 பேர் மீதும் ஐபிசி 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலவாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார்(23) என்ற ஊழியரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: