சென்னை: மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை : உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தை மாவட்டக் கழகத்திலிருந்து பெற்று, தாம் போட்டியிட விரும்பும் மாநகராட்சி மேயர், நகராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பொறுப்புகளைத் தவிர மற்ற பொறுப்புகளுக்கு உரிய படிவத்தில் குறிப்பிட்டு வருகிற 27-11-2019 வரை, விருப்ப மனு தாக்கல் வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே மாநகராட்சி மேயர், நகராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் நவம்பர் 28 முதல் 30ம் தேதி வரை தாங்கள் செலுத்திய கட்டணத்திற்கான ரசீதினை கொடுத்து மாவட்டக் கழக அலுவலகத்தில் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.