நம் நாட்டில் பிங்க் நிறப்பந்தில் ஆடி அனுபவத்தைப் பெற்ற பிறகு எந்த நாட்டில் வேண்டுமானாலும் ஆடலாம்: விராட் கோலி

கொல்கத்தா: வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது. இதேபோல வங்காளதேச அணியும் முதல் முறையாக பகல்-இரவில் ஆடுகிறது. இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; நாங்கள் நேற்று பயிற்சி செய்த போது பந்து நமக்கு அருகில் இருப்பது போல் தெரிகிறது, ஆனால் அவ்வளவு அருகில் இல்லை என்பதே உண்மை.

5 நாள் கிரிக்கெட் என்ற போது பொதுவாகவே பந்துகள் கொஞ்சம் அதிகமாக வினையாற்றும். இதில் பந்து தெரியாமல் போனால் இன்னும் கடினம். புதிய வண்ணத்தை கண்கள் பழகிக் கொள்வது சிரமம். எவ்வளவு விரைவில் நம் கையை பந்து மோதும் என்பதும் தெரியவில்லை. பந்தும் சிகப்புப் பந்தை விட வேகமாகப் பறக்கிறது. அதன் கூடுதல் பளபளப்பு அதனை வேகமாக பயணிக்க வைக்கிறது. பனிப்பொழிவு பற்றி இப்போது எதுவும் கூற முடியவில்லை, எப்போது பனிப்பொழிவு தொடங்கும் என்பதும் சரியாகத் தெரியவில்லை. மற்ற இடங்களில் பகலிரவு டெஸ்ட் ஆடுவதற்கும் இந்தியாவில் ஆடுவதற்கும் இதுதான் வித்தியாசம்.

ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்பதில் கவனம் தேவை.  அதன் பளபளப்பு செயற்கைப் பந்து போல் உள்ளது. பந்து சிகப்புப் பந்தை விட கடினமாக உள்ளது. கனமாக உள்ளது, விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்வதற்குக் கூட கூடுதல் சக்தி தேவைப்பட்டது. பகல்வேளையில் உயரமான கேட்ச்களை எடுப்பது கடினம். நண்பகலில் கேட்ச்களில் வெள்ளை நிறப்பந்து போல் தெரிகிறது. பிங்க் பந்தில் ஆடுவதற்கு தயாரிப்பு தேவை அதனால் தான் ஆஸ்திரேலியாவில் கேட்ட போது மறுத்தோம், நம் நாட்டில் பிங்க் நிறப்பந்தில் ஆடி அது எப்படி செயல்படுகிறது என்ற அனுபவத்தைப் பெற்ற பிறகு எந்த நாட்டில் வேண்டுமானாலும் பிங்க் பந்துகளில் ஆடலாம் என்று கூறியுள்ளார்.

Related Stories: