இலங்கை பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து

டெல்லி: இலங்கையில் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அனுராதபுரத்தில் புத்தமத கோயில் அருகே  நடந்த விழாவில் அவர் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். மக்கள் தீர்ப்பை மதித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. கோத்தபய ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய  தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை, ரணில் ஆதரித்து வந்தார்.

இதனால் ரணில் பதவி விலக வேண்டும் என்பதில் கோத்தபய உறுதியாக இருந்தாக கூறப்படுகிறது. மேலும், அந்த பதவியில் தனது சகோதரர் ராஜபக்சேயை அமர  வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரதமர்  பதவியை ரணில் விக்கிரமசிங்கே நேற்று திடீரென ராஜினாமா செய்தார். தனது  ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேயிடம் அவர் அளித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று சிங்களமொழியில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘‘கோத்தபய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய அரசை அமைப்பதற்கு வசதியாக நான் பதவி விலகுகிறேன்’’ என கூறியிருந்தார்.

இதற்கிடையே, புதிய பிரதமராக தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை கோத்தபய ராஜபக்சே நியமித்தார். பின்னர் கொழும்பில் உள்ள பாராளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இலங்கையில் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்; இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா – இலங்கை இடையேயா உறவை வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: