சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக 75 மரங்களை வெட்ட இடைக்கால தடை

சென்னை: சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு 4 ஏக்கரில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது.

கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு 4 ஏக்கரில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு

உலகிலேயே இரண்டாவது பழமையான கண் மருத்துவமனையாக, எழும்பூர் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக, அங்குள்ள 75 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எழும்பூரைச் சேர்ந்த கேப்டன் நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்

.மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் இல்லாத காலியிடங்கள் இருக்கும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவது சட்டவிரோதமானது என மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு சுற்றுச்சூழல் பிரச்னையாக இருப்பதால், சம்பந்தப்பட்ட அமர்வில் மனுவை பட்டியலிடும்படி நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

மரங்களை வெட்ட இடைக்காலத் தடை

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி. சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். அத்துடன் புதிய கட்டிடம் கட்ட மாற்று இடம் என்ன ? மரங்களை வேறு இடத்தில் நட்டு பராமரிக்க வாய்ப்புள்ளதா ? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் எழும்பூர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: