×

கூடங்குளம் அணுக்கழிவு பாதுகாப்பு விவகாரம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அணுசக்தி கழகத்திற்கு 2 வாரம் கெடு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கூடங்குளம் அணுக்கழிவுகளை பாதுகாப்பது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அணுசக்தி கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் உற்பத்தி மையத்தால் பல தீங்குகள் விளையும் என அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக சுந்தர்ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமலும் இருந்து வருகிறது. மேலும் அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல் கடலில் கொட்டப்படுகிறது. அதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படும் வரை அணு உலையில் மின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது. அதேபோல் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு அணுக் கழிவுகளை பாதுகாக்கும் விதமாக வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கழிவு பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்திட வேண்டும். மேலும் அத்தகைய திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி உத்தரவிட்டது.
வழக்கின் தொடர் விசாரணையில், அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் கேட்டது. இதையடுத்து 4 வாரம் அவகாசம் அளித்து ஜனவரி 2ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அணுசக்தி கழகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது வாதத்தில், “அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் அவகாசம் வேண்டும்’’ என்றார். ஆனால் இருதரப்பு வாதத்துக்கு பின், “அடுத்த 2 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Nuclear Power Corporation ,Supreme Court Action A ,Kudankulam Nuclear Security ,Nuclear Power Corporation: Supreme Court , Koodankulam Nuclear Power, Supreme Court
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!