கோவா விழாவில் ரஜினிக்கு சாதனையாளர் சிறப்பு விருது: ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்தார்

பனாஜி: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் கோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கியது. வரும் 28ம் தேதி வரை 9 நாட்கள் இவ்விழா நடைபெற  உள்ளது.  விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் அமிதாப்  பச்சன், ரஜினிகாந்த்  உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப்பச்சன் இணைந்து ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினர். அப்போது பேசிய ரஜினிகாந்த்,  இந்த விருதை என்னுடன் பணியாற்றிய  அனைவருக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். விருதை வழங்கிய அரசுக்கு நன்றி என்று கூறினார். ஆங்கிலத்தில் பேசிய ரஜினி, திடீரென தமிழில் ‘என்னை வாழ வைத்த தமிழ் தெய்வங்களே நன்றி’ என்றார்.  

இந்த விழாவில் இந்திய சினிமா துறையில் பெரிய  பங்களிப்பு செய்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும்  விருதுகள் வழங்கப்படுகின்றன. விழாவில் 76 நாடுகளை  சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.  26  இந்திய படங்களும் திரையிடப்பட உள்ளன. தமிழ் படங்களில் பார்த்திபனின் ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகியவை  திரையிடப்படுகின்றன.

Related Stories: