சூரத்: சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் லீக் சுற்றில் தமிழகம் - கர்நாடகா மோதும் பி பிரிவு போட்டி சூரத்தில் இன்று மாலை 6.30க்கு தொடங்குகிறது. சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று கடந்த 9ம் தேதி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ரயில்வே, மும்பை உட்பட 38 அணிகள் 5 பிரிவுகளாக களமிறங்கின. லீக் சுற்று 17ம் தேதி முடிவடைந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த தமிழ்நாடு உட்பட 10 அணிகள் அரையிறுதிக்கு முந்தைய சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த சுற்றின் ஏ பிரிவில் டெல்லி, பரோடா, ராஜஸ்தான், மகராஷ்டிரா, அரியானா அணிகளும், பி பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்கண்ட், பஞ்சாப், மும்பை அணிகளும் இடம் பெற்றுள்ளன. சூப்பர் லீக் போட்டிகள் வரும் 27ம் தேதியுடன் முடிகிறது. பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் களம் காணும். அரையிறுதி ஆட்டங்கள் 29ம் தேதியும், பைனல் டிச.1ம் தேதியும் நடைபெறும்.