×

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா: புதிய பிரதமராகிறார் ராஜபக்சே

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியில் இருந்து  ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து கோத்தபயவின் அண்ணன் ராஜபக்சே இன்று புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே  அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அனுராதபுரத்தில் புத்தமத கோயில் அருகே  நடந்த விழாவில் அவர் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து,  தற்போது பிரதமர் பதவியில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, பதவியில் இருந்து  தானாக விலகும் வகையில் ராஜபக்சேயும் அவரது கட்சியினரும் நெருக்கடி  அளித்ததாக கூறப்படுகிறது. கோத்தபய ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய  தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை, ரணில் ஆதரித்து வந்தார்.  இதனால் ரணில் பதவி விலக வேண்டும் என்பதில் கோத்தபய உறுதியாக இருந்தாக  கூறப்படுகிறது. மேலும், அந்த பதவியில் தனது சகோதரர் ராஜபக்சேயை அமர  வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பிரதமர்  பதவியை ரணில் விக்கிரமசிங்கே நேற்று திடீரென ராஜினாமா செய்தார். தனது  ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேயிடம் அவர் அளித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று சிங்களமொழியில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘‘கோத்தபய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய அரசை அமைப்பதற்கு வசதியாக நான் பதவி விலகுகிறேன்’’ என கூறியிருந்தார். இந்நிலையில் அதிபர் கோத்தபய, தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள தனது அண்ணன் ராஜபக்சேயை புதிய பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் முறைப்படி பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ராஜபக்சே இன்று பதவியேற்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை 15 உறுப்பினர்களை கொண்ட காபந்து அமைச்சரவை செயல்படும்.

Tags : Ranil Wickremasinghe ,Sri Lanka , Sri Lanka's Prime Minister Ranil Wickremasinghe resigns
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...