பள்ளிபாளையம்: உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் அமைப்பினர், முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். விவசாயிகள் யாரும் போராடவில்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.அமைச்சர் தங்கமணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் தங்கள் பிரச்னை குறித்து கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு, ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து விவசாயிகள் அமைப்பினரும், சென்னையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து, உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது வழங்கும் நிவாரணமே போதுமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருசிலர் அரசியல் காரணத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மற்றபடி விவசாயிகள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. தேர்தலில் போட்டியிடும் நபர்களை, அமைச்சர்கள் தீர்மானிப்பதில்லை. மாநிலத் தலைமை தான் வேட்பாளர்களை தீர்மானித்து, தகுதியான நபர்களுக்கு சீட் வழங்குகிறது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.