கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்தில் சிக்கி இடது கால் அகற்றப்பட்ட பெண்ணின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டது.கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் நாகநாதன். இவருடைய மகள் ராஜேஸ்வரி(31). தனியார் கடந்த 11ம் தேதி ராஜேஸ்வரி மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார். கோல்டுவின்ஸ் பகுதியில் சென்ற போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினர் நட்டுவைத்திருந்த கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் விபத்தில் சிக்கினார். இதில் லாரி மோதி அவரின் 2 கால்களும் நசுங்கியது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடைய இடது கால் தொடை பகுதியில் இருந்து அகற்றப்பட்டது. அவரை மருத்துமனையில் சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆறுதல் கூறி பெற்றோரிடம் மருத்துவ செலவுக்காக ₹5 லட்சம் நிதி உதவி அளித்தார். இந்நிலையில், ராஜேஸ்வரியின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை 7 மணி நேரம் நடந்தது. இடது கால் அகற்றப்பட்ட காயம் ஆறிய பின் செயற்கை கால் பொருத்தப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.