மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம், தொடர்ந்து நூறாவது நாளாக 100 அடிக்கும் குறையாமல் உள்ளது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும், கடந்த ஜூலை முதல் வாரத்தில் பெய்த கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 13ம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு, அணையின் வரலாற்றில் 65வது ஆண்டாக நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன் பின்னர் தொடர் மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்து நடப்பாண்டில் அடுத்தடுத்து 4 முறை, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து நூறாவது நாளாக, 100 அடிக்கு குறையாமல் உள்ளது.