நாகர்கோவில்: கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடியில் நடந்த போலீஸ்- மாவோயிஸ்ட் தாக்குதலில் குமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த சேவியர் என்பவரது மகள் அஜிதா மற்றும் தமிழகத்தை சேர்ந்த மணிவாசகம், சீனிவாசன், கார்த்திக் ஆகிய 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சீனிவாசன், அஜிதாவின் உடல் கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டன. சீனிவாசன் உடல் அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்துள்ளது. அஜிதாவின் உடலை பெற்றுக்கொள்ள முதலில் ஆர்வம் காட்டிய அவரது தாயார் மற்றும் உறவினர்கள் பின்னர் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.இதுதொடர்பாக கேரள போலீசார், உடலை 48 மணிநேரத்தில் அடையாளம் காட்டாவிட்டால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விளம்பரம் செய்தனர். இந்தநிலையில் அஜிதாவின் உடல் இந்த நாட்டுக்கும் வேண்டாம். குடும்பத்திற்கும் வேண்டாம் என்று அவரது போட்டோக்களை பார்த்து அடையாளம் காண்பித்த அவரது தாய் சொர்ணமேரி கேரள குற்றப்பிரிவு போலீசில் உறுதிபட தெரிவித்துள்ளார்.