கோவாவில் நடைபெற்ற 50வது சர்வதேச திரைப்பட விழா: நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்பு

கோவா: கோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமிதாப்பச்சன் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.  50வது தேசிய திரைப்பட விழா கோவாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த விழா வருகின்ற 28ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இந்த விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 28ம் தேதி வரை நடக்கும் இந்த திரைப்பட விழாவை நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் சரண் ஜோகர் தொகுத்து வழங்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் தற்போது இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக அமிதாப்பச்சனுக்கு தாதா சாகிப் பால்கே விருதும், ரஜினிக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூபிலி விருதும் வழங்கப்படுகிறது. அமிதாப்பச்சனை கவுரவிக்கும் வகையில் அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. இதேபோல பொன்விழா ஆண்டையொட்டி சிறந்த 12 திரைப்படங்கள் வரிசையில் கே. பாலச்சந்தர் இயக்கிய இரு கோடுகள் படமும் திரையிடப்படுகிறது. 9 நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் சர்வதேசம், இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் 3 இடங்களில் திரையிடப்படுகின்றன.

ஈரான், கொரியா, பிரான்ஸ் உள்பட 76 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களும், இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. இந்த விழாவில் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களும் தேர்வாகி திரையிடப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம் விக்னேஷ், சிவன் மற்றும் நடிகைகள் நித்தியா மேனன், தமன்னா, டாப்ஸி உள்ளிட்டோர் திரை தொழில்நுட்பம் சார்ந்து பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. தற்போது இந்த விழாவானது தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: