சென்னை : கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர், சிவகணை ஆகிய இடங்களில் ஜனவரி 15ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த 6 ஆயிரத்து 720 தொல்லியல் பொருட்களை புகைப்படங்களாக நுங்கப்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சுதை சிற்பங்களும், சூது பவள மணிகளும், விளையாட்டுப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படக் கண்காட்சியை மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார். இதனை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் மக்கள் பார்வையிடலாம் என்று அவர் தெரிவித்தார். சீனாவுடன் கலாச்சார பரிமாற்றம் செய்ய தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். பள்ளி மாணவர்களை அருகில் இருக்கும் அருங்காட்சியகத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.