சோனியா காந்தி, ராகுலுக்கு ஏதேனும் நேர்ந்தால் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்: சசி தரூர் பேட்டி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து,  பிரதமர்களின் பாதுகாப்புக்காக தனிப் பிரிவு வேண்டுமென சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) உருவாக்கப்பட்டது. இக்குழு பிரதமர்கள் மற்றும் முன்னாள்  பிரதமர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என கடந்த 1988ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, கடந்த 1991ல் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு  பிரதமர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொறுப்பு எஸ்பிஜி.க்கு வழங்கப்பட்டது.

அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு  கடந்த 28 ஆண்டுகளாக எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை, உள்துறை அமைச்சக செயலர், அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங்குக்கு எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மன்மோகன் சிங் போலவே, சோனியா குடும்பத்தினருக்கும் நேரடியாக எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு  உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர். இனி இவர்கள் 3 பேருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்; இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டதை அடுத்தே, சோனியா காந்தியின் குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது என குறிப்பிட்டு பேசிய அவர்; அந்த பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக கூறினார். பாதுகாப்பை குறைப்பதால் மத்திய அரசு என்ன சாதிக்கப் போகிறது என கேள்வி எழுப்பிய அவர், சோனியா காந்தி குடும்பத்தினரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேருமானால், அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: