சென்னை: கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க தமிழக அரசுதான் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். தமிழர் நாகரிகம் குறைந்தது 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையானது என்பதை உலகிற்கு உணர்த்தியது கீழடி அகழாய்வு எனவும், 2015ல் அகழாய்வுகள் தொடங்கப்பட்ட கீழடியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிப்பதற்காக இனிமேலும் காத்திருக்க வேண்டியது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தால் அங்கு நிலங்களை கையகப்படுத்துவது எளிதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தொல்லியல் ஆழ்வுக்காக அப்பகுதியினர் நிலங்களை வழங்க தயாராக உள்ளதாலும் அதற்கு ஈடாக இழப்பீடுகள் வழங்க அரசுகளும் தயாராக இருப்பதாலும் இதில் எந்த சிக்கலும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க அவசியம் இல்லை என்றும் 6ம் கட்ட அகழாய்விற்கு பிறகு இதுகுறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு இது குறித்து உடனடியாக மத்திய அரசுக்கு பரிந்துரையை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கீழடி அகழாய்வை விரிவுபடுத்தவும், அருங்காட்சியத்தை திட்டமிட்டதை விட பிரம்மாண்டமாக அமைக்க வசதியாக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெற வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.