ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றாலும்,  அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.இதனால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் வரும் 27ம் தேதி மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.  இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 15ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இதனை எதிர்த்து ப. சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது வாதிட்ட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக்  மனு சிங்வி அமலாக்கத்துறை மீது புகார் தெரிவித்தனர். ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்படுவதை தடுக்க ஒரே வழக்கின் பதில் மனுவை, வெட்டி ஒட்டி அனுப்பும் வேலையை அமலாக்கத்துறை தொடர்ந்து செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினார். 91 நாட்களாக ப.சிதம்பரம் சிறையில் உள்ளதால் அமலாக்கத்துறையின் பதில் மனுவை பெற்றவுடன் விசாரணையை உடனே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: